Wednesday, June 29, 2011

நமஸ்காரம்

            பாரத தேசத்தில் தோற்றம் பெற்றதும், மிகவும் புனிதமானதுமான நாட்டியக்கலை என்று மக்கள் மனதில் தெய்வீக கலை என்ற அந்தஸ்தைப் பெற்றதோ அன்றே தட்டிக் கும்பிடும் வழக்கமும் ஆரம்பமாயிற்று. அதாவது தட்டிக்கும்பிடுதல் என்ற வழக்கம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இத்தட்டிக்கும்பிடும் செயல் நமஸ்காரம் எனவும் கூறப்படும். இந்நமஸ்காரம்   இரு வகைப்படும்.சின்ன நமஸ்காரம் , பெரிய நமஸ்காரம். பொதுவாக நாட்டியப் பயிற்சியின் பொது செய்யப்படும் நமஸ்காரம் சின்ன நமஸ்காரம் ஆகும். நாட்டியக் கச்சேரியின் பொது இவ்விரு நமஸ்காரமும் செய்யப்படும்.

           இந் நமஸ்காரத்தினை நடனமாடும் ஒருவர் நடனமாடுவதற்கு முன்னரும் நடனமாடிய பின்னரும் செய்தல் வேண்டும். நமஸ்காரத்தின் போது  பூமாதேவியை வழிபடுவதாகக் கூறப்படும். இந் நமஸ்காரத்தின் போது கடஹாமுகம், சிகரம், சதுரம் என்னும் ஒற்றைக்கை முத்திரைகள் மூன்றும், அஞ்சலி எனப்படும் இரட்டைக்கை முத்திரை ஒன்றும் மொத்தம் நான்கு முத்திரைகள் பிரயோகிக்கப்படுகின்றன. 

          நமஸ்காரத்தின் போது முதலில் சமநிலையில் நின்றவாறு, கைகளை மார்பின் முன்பு கடஹாமுக முத்திரையில் வைத்துக் கால்களால் வலது, இடது என்ற ஒழுங்கில் பூமியில் இருதடவை தட்ட வேண்டும். பின் இரு கைகளிலும் சிகர ஹஸ்தத்தை நீட்டிச் சுற்ற வேண்டும். பின் முழுமண்டியில் அமர்ந்து கைகளில் சதுர முத்திரை பிடித்து பூமியைத் தொட்டு கண்ணில் ஒற்றி அஞ்சலி ஹஸ்தத்தினால் வழிபடுதல் வேண்டும்.

நமஸ்காரத்தின் உட்பொருள்
       
           அன்னை பூமாதேவியிடம் அவள் மீது மிதித்து தட்டுவதற்கு மன்னிப்பு வேண்டுவது அதன் பொருள். அஞ்சலி கையை தலைக்கு மேல் உயர்த்தி கடவுளுக்கும், புருவமத்தியிலிருந்து குருவுக்கும், மார்புக்கு எதிரிலிருந்து சபையினருக்கும் அஞ்சலி செலுத்துவது மரபு. இவை தவிர வகுப்பில் கட்டிக் குச்சியையும் மேடையில் கைத்தாலத்தையும் தொட்டு வணங்குவதற்கும் உட்பொருள் உண்டு. அண்டசராசரமும் இயங்கிவருவது ஒரு சீரிய தாள அளவின் அடிப்படையில்தான். சூரிய உதயமும் , அஸ்தமனமும் ஒரு கால அளவைக் கொண்டு தானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாளம் என்பது காலத்தையும் அதன் பிரிவுகளையும்தான் குறிக்கும். இவ்வகிலாண்ட வலயத்தோடு ஆடுபவலும் மனம் ஒருமித்து சற்று தியானித்து கைத்தாளத்திற்கு வணக்கம் செலுத்த வேண்டும். தாளக் கருவியாகிய மிருதங்கத்திர்க்கும் வணக்கம் செலுத்தல் மரபு. நாம் அன்றாடம் ஈடுபடும் செயல்கள் யாவுமே பரம்பொருளுக்கு செலுத்தும் வணக்கம் அவ்வழியில் செய்யும் தொழிலே தெய்வம் என்றுணர்ந்து கருத்தொருமித்து செயல்படுவதே தட்டிக் கும்பிடுவதன் உட்கருத்து.          








No comments:

Post a Comment